Wednesday, May 6, 2009

நான் கடவுள்

எச்சரிக்கை: இந்த தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் இதை பாலாவின் "நான் கடவுள்" பற்றிய மற்றுமொரு வலைப்பதிவு என்று நினைப்பீர்களானால் நீங்கள் இத்துடன் நிறுத்திவிட்டு படிக்காமல் விலகிக்கொள்வது நல்லது. அப்படி விலகாமல் உங்கள் சொந்த ரிஸ்கில் இதை படிக்கத்தொடர்வீர்களானால் நான் பொறுப்பாளி அல்ல.

நீங்கள் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா?

கல்கியின் முத்திரைப்படைப்பு அவரின் வசீகர தெள்ளிய நடை, பாத்திரப்படைப்பு இவை எல்லாம் காலை சாப்பிட்ட முதல் டிகாக்ஷன் காபி சுவைபோல நினைக்குந்தோறும் மனதில் மணம் பரப்பும்மே!

அதில் உங்களுக்கு வந்தியத்தேவன், ராஜராஜன், குந்தவை போன்ற மெயின் கதாபாத்திரங்களுள் யாராவது ஒருவரோ அல்லது எல்லோருமோ உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாயிருக்கக்கூடும்.

அக்கதையில், இவர்களுக்கு இணையாக கதை முழுவதும், ரஜனி படத்தில் செந்தில் மாதிரி, வரும் ஆழ்வார்கடியானை நினைவிருக்கிறதா?

எப்படி மறக்க முடியும்? உடல் முழுதும் வைணவத் திருச்சின்னங்களும் கையில் குண்டாந்தடியுமாய் கல்கி அவரை படைத்து கதை நகர்த்தியது மறக்கக் கூடியதா?

அவர் ஒரு தீவிரt வைணவர். அந்த பற்றினால் சைவத்தையும் சிவனையும் எள்ளி நகையாடுவார். கல்கியின் வரிகளில் அவரது நகையாடல்களில் ரசமிருக்கும். படிப்பவரை புன்முறுவலுடன் ரசிக்க வைக்கும்.

அதே சமயம், விஷ்ணுவை மற்றவர் குறைவாய் பேசும் போது அவர் கொள்ளும் ஆவேசம் நம்மை பதைபதைக்கச் செய்யும்.

அவர் கடவுள் விஷ்ணு. அவர் தான் பெரியவர். அவர் தான் கடவுள்.

அதே போல் வீரசைவர்களுக்கு சிவன் தான் கடவுள். அவர் தான் பெரியவர். அவர் தான் கடவுள்.

"அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயிலே மண்ணு..."

"அவரவர் கடவுளர் குறைவிலர்..."

"சிவா விஷ்ணு அபேதம்"

இப்படியெல்லாம் சொல்லப்படிருதாலும் "என் கடவுள் தான் பெரியவர்/சிறந்தவர்" போக்கு நம் சமுதாயத்தில் வேறோடியிருப்பது கண்கூடு.

இதே கருத்து நாத்திகம் பேசும் கமலின் தசாவதாரத்தில் மிகைபடுத்தப்பட்டிருந்தாலும், காலம் காலமாய் மக்களின் sub-consciousல் ஆழப் பதிந்திருப்பத்தின் வெளிப்பாடே அது என்று உணர்த்துகிறது.

இது எதோ இந்து மதத்தில் தான் என்றில்லை; உலகலாவியது.

இஸ்லாமியர்கள் மற்றவர்களை காபிர்ஸ் (kafirs) என்றும் கிறிஸ்தவர்கள் பகன்ஸ் (pagans) என்று வழங்குவதும் இதை உறுதிப்படுத்தும்.

இது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

காரணம் இருக்கிறதா?

இருக்கவேண்டுமே!

வேதாந்தம் விடை தருகிறது.

"தத் தவம் அசி..." "அஹம் ப்ரமாஸ்மி..."

வேறு வேறல்ல...

எல்லாமே ஒன்று தான்.

ஆம். அத்வைதம் தான் காரணம்.

வியப்பாயிருகிறதல்லவா?

கடவுளை பலர் பலவாறு விவரித்திருக்கிறார்கள்...

ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதி...என்று மாணிக்கவாசகர் திருவாசகமாய் அருளியதை உருவகப்படுத்திப் பார்க்க கொஞ்சம் ச்ரமப்படத்தான் வேண்டியிருக்கிறது...

முக்காலமும் நீ; அதையும் தாண்டி காலத்தை கடந்தவனும் நீ...

முக்குணமும் நீ; அதையும் தாண்டி நிற்குணமாய் இருப்பவனும் நீ...

முச்சக்தியும் நீ; அதையும் தாண்டி சிவமாய் இருப்பவனும் நீ...

நீயே பிரும்மா...

நீயே விஷ்ணு...

நீயே சிவன்...

நீயே இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, நிலம், நீர், காற்று, ஆகாயம்.....

நீயே எல்லாமும்...

இவ்வாறு பொது குணங்களால் போற்றப்படுகிறது....

இது சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் கூறப்பட்டிருக்கிறது...

ஏன்... எந்த கடவுளானாலும் இப்படி போற்றப்படிருக்கின்றது.

ம்ம்...

அப்படியானால் யார் பெரியவர்?

"அலகிலா விளையாட்டுடையான்..." என்பதற்கேற்ப பரப்ரும்மம் சங்கல்பித்துக்கொண்டு விளையாட்டாய் பிரபஞ்சத்தைப் படைத்து முத்தொழில் புரிய முக்கடவுளையும் படைத்தது...

அத்வைதம், எல்லோரும் அந்த ப்ரும்மமே அல்லது பிரும்மத்தின் ஸ்வரூபமே என்கிறது.

அப்படியானால், பிரம்மா விஷ்ணு சிவன் எல்லோரும் அந்த ultimate ஆன பிரும்மம் தானே...

அப்படியானால், அந்த ultimate பிரம்மத்தின் சிறப்புகள், குணாதிசயங்கள் எல்லாம் இவர்களுக்கானது என்று சொல்வதில் தவறில்லையே...

விஷ்ணுவை பிரும்மம் என்று பார்த்தால் அவர்தான் ultimate... சிவனைப்பர்த்தால் அவர் தான் ultimate...

ultimate ஆன பிரும்மத்தின்

ஸ்வரூபம் எல்லோர் மீதும் ஏற்றி கூறப்பட்டிருப்பதால் ஒன்றை மற்றும் தனியாய் பார்ப்பவர்க்கு அவர் தான் ultimate என்று படுவதில் தவறில்லையே...

இந்த லாஜிக்கை கொஞ்சம் விஸ்தாரப்படுதினால்....

அல்லா தான் ..., யேசுதான்..., உலகநாதன் தான்...., மாடசாமி தான்...

நீ தான்..., நான் தான்... ultimate....

உலகநாதன், மாடசாமி, நீ, நான் மற்றெல்லாரும் பிரும்மம்...

எல்லாமே பிரும்மம்.

இதை உணர்ந்த நிலையில்,

வைஷ்ணவன் இல்லை; அவனே விஷ்ணு....

சைவன்இல்லை ; அவனே சிவன்...

இஸ்லாமியன் இல்லை; அவனே அல்லா...

கிறிஸ்தவன் இல்லை; அவனே கிறிஸ்து...

என் கடவுள் இல்லை; நான் கடவுள்...

நானே கடவுள்...

இதைத்தான் ஓஷோ,

கிறிஸ்தவனாய் இராதே, நீயே க்ரிஸ்துவாகு; புத்த மதத்தவனாய் இராதே, நீயே புத்தனாகு என்கிறார். எத்துணை சத்தியமான வாக்கியம்?

"கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்"

ஏனென்றால், கண்டவர் கண்ட பொருளாய் ஆகிவிடுவதால் விண்டுவதற்கு யாருளர் ?

எனவே, காணும் வரையில் இது போன்று விண்டுகொண்டிருப்போம்.

பி.கு.: இந்த வலைப்பதிவு என் குருஜிக்கு சமர்ப்பணம். எனென்றால், போறபோக்கில் எளிமையாய் ஒரே வரியில் அவர் கூறியதைப் பற்றி சிந்தித்து விவரித்து எழுதப்பட்டதே இந்த வலைப்பதிவு. இந்த வலைப்பதிவில் எதாவது தவறிருக்குமாயின் அது என்னுடையதே.

Saturday, April 11, 2009

நியூஸ் பேப்பர் - பார்ட் II

தகவலறியும் பசி, ஆவல், வெறி, வேட்கை, .... எப்படித்தான் விவரிப்பது??

"தகவலறியும்" கூட சரிதானா ??

"அறியும்" போதும் என்று நினைக்கத்தோன்றுகிறது...

எதுவாயினும், அவருடைய அறியும் பசி, அகோர பகாசுர ஜடராக்னி..

அந்த அக்னியில் அத்தனையும் ஆஹுதி..

ந்யூஸ் பேப்பர், வார-மாத புத்தகங்கள், ஸ்லோக புத்தகங்கள், கல்யாண பத்திரிகைகள், பக்கோடா-கடலை மடித்த காகிதம், பஸ் டிக்கட்டுகள், பிட் நோட்டீஸ், வால் போஸ்டர்கள், இன்ன பிற மற்றும் எதுவாயினும்...

ஸ்வாஹாஹா....

நெய் ஊற்ற ஹோமாக்னி அணையுமோ?

மேலும் மேலும் கொழுந்து விட்டு தாண்டவமாடி வளர்ந்து ...

மேலும் மேலும் நெய் ஊற்ற...

ஸ்வாஹாஹா.....

ஸ்வாஹாஹா...

ஆஹுதியாகும் எல்லாவற்றையும் ஜீரணித்து தூய பொன்னிறமாய் ஜக ஜகவென்று...

ப்ரகாஸிப்பது ஹோமாக்னியா? அறிவா?

இரண்டும் வேறு வேறா?

விவரிக்க வார்த்தையில்லை என்பதை விட அந்த முயற்சியில் தோல்வி என்பது பொய் கலப்பில்லாதது.

வந்த பேப்பரை யாரும் முதலில் எடுத்துவிட முடியாது. அது அவரது உரிமை.

டீக்கடையில் பழகிய மனிதர் வாங்கிப் போடும் பொறைக்காக வாலாட்டிக் காத்திருக்கும் நாயின் நிலை தான் என் நிலை.

பேப்பர் வந்தவுடன் தான் எத்தனை மரியாதைகள் அதற்க்கு சில வீடுகளில்.

ஏடாகப் பிரியாமல் இருக்க ஸ்டேப்ளர் பின் குத்து...

கோணி ஊசி கொண்டு ட்வைன் நூல் காதணி விழா சில வீட்டில்...

அதோடு நில்லாமல் வீட்டு நம்பரோ உரிமையாளர் பெயரோ பொறிக்கப்பட்டு களவு போகாமல் இருக்க/ களவு போனால் அடையாளம் காண என்று ஜோடனைகள் வேறு...

மதியத்திற்கு மேல் ஆயுள் காலாவதியாகும் வஸ்துவிற்குத்தான் உபசாரம் எத்தனை....

உபசாரம்தான் இத்தனை விதம் என்றால் அதை உபயோகிப்பதிலும்தான் எத்தனை விதம்...

முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை படிப்பார் சிலர்...

வேறு சிலர், அப்படியே தலைகீழாய் கடைசி பக்கம் ஆரம்பித்து முதலில் முடிப்பார்.

இன்னும் சிலர், அவரவர் அபிமான பக்கத்தில் ஆரம்பித்து (பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் பக்கம்) பின் மற்ற பக்கங்கட்க்கு செல்வர்.

வெறும் ஹெட்லைன்ஸ், போட்டோ மட்டும் சிலர் பார்ப்பதுண்டு.

பேப்பரையே பைவ் கோர்ஸ் மீல்ஸ் மாதிரி படிப்பவர் உண்டு. appetizer மாதிரி முதல் ரவுண்டில் ஹெட்லைன்ஸ் தொடங்கி, படிப் படியாய் முன்னேறுவார்கள்.

முதலில் ஹெட்லைன்ஸ் மற்றும் முக்கியமான செய்திகளை நோட்டம் விட்டு, பின்பு மதியம் சாவதானமாய் முழுதாய் வாசிக்கும் ரிட்டையர்டு கோஷ்டியும் உண்டு.

சிலர் எல்லாவற்றையும் கடந்து ஓபிச்சுவரி, வரி விளம்பர Change of Name காலங்களில் ஊடுருவியிருக்கும் நியூமராலஜி மற்றும் மத மாற்றம், மேட்ரிமோனியல் பத்திகளில் பொதிந்துள்ள ஜாதீயம், மற்றும் வெள்ளைத் தோல் விருப்பங்களில் மூழ்கி சமூகக் கவலை கொள்வார்கள்.

இன்னும் சிலர், இவ்வாறு கவலை கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கர்ம ச்ரத்தையாய் 'Apropos your article dated...' என்று ஆரம்பித்து பண்டிதத்தனம் நிறைந்த கரடு முரடு வார்த்தைகளில் குமுதம் தலையங்கம் போல "யாராவது ஏதாவது செய்யவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்' என்ற ரீதியில் லெட்டர்ஸ் டு த எடிட்டரில் எழுதி அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள்.

(நானும் இம்மாதிரி லெட்டர்ஸ் டு த எடிட்டரில் எழுத ஆரம்பித்து, பேப்பரில் பேர் வெளியாக புளகாங்கிதமடைந்து, பின் முற்றி போய் விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் சேர விண்ணப்பித்து, கடைசி கட்டத்தில் நேர்காணலுக்கு விகடன் ஆபீசுக்கு சென்னை சென்று, அங்கு ஆசிரியர் பாலசுப்ரமணியத்தையும், மதனையும் ஆவென்று வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பியது அனைத்தும் ஒரு தனி வலைப்பதிவிற்கான விஷயங்கள்.)

இதில் ஏதாவதொரு வகை சொல்லப்படாமல் விடுபட்டிருந்தால், அதை சுட்டுபவர்க்கு நமீதா படம் வெளிவராத வெகுஜன வாரப்பத்திரிக்கை படிக்க வாய்க்க பிரார்த்திக்கிறேன்.

பேப்பரின் பிராட் ஷீட் பார்மட்டை முழுவதுமாய் பயன் படுத்துவார் என் தாத்தா. பேப்பரை ஏன் ஏடு என்கிறார்கள் என்பதை என் தாத்தா பேப்பர் படிப்பதைப் பார்ப்பவர்கள் சுலபமாய் புரிந்துகொள்வார்கள்.

ஒவ்வொரு ஷீட்டாய் படித்து அதை தூக்கிப் போடுவார். நான் அதை பிடித்துப் பிடித்துப் படிப்பேன். காட்டில் அரச மரத்தில் வசித்த பிரம்ம ராக்ஷஷன் சாப விமோசனம் பெற வேதத்தை அரச இலையில் தன் ரத்தத்தால் எழுதி கீழே போட அதை எடுத்துப் படித்த சிஷ்யர் போல உணர்ந்தேன்.

இப்போது அவர் இல்லை.

முழுவதாய் எனக்கே எனக்காய் பேப்பர்.

ஆனாலும் அதைப் படிப்பதில் முன்பு இருந்த தீவிரம் சற்று குறைந்திருப்பதாய் உணர்கிறேன். இப்போதிருக்கும் நிலையில், தொண்ணூறு வயதில் என் தாத்தாவிடம் இருந்த தீவிரம் இன்னும் ஐந்து வருடம் கழித்து எனக்கிருக்குமா என்று தெரியவில்லை.

அது வாய்க்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்; "more things are wrought by prayer; than this world dreams of..." என்று நம்பிக்கை தரும் டென்னிசனின் வார்த்தைகளைஒற்றி.

Sunday, March 22, 2009

விரல் வித்தை

இந்த தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு ரஜினியின் பாபா முத்திரை, படையப்பாவின் "என் வழி தனீ வழீ...." என்ற விரலசைப்பு, பாட்சாவின் "ஒரு தரம் சொன்னா... நூறு தரம் சொன்ன மாதிரி..." போன்ற வசனங்களுக்கு செய்த விரலசைப்புகள், மற்றும் இன்ன பிற சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ் துரத்துபவர்களான விஜய்யின் அறை மனது காப்பியும் மற்றும் சிம்புவின் அப்பட்டமான காப்பிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் நிச்சயமாக தமிழ் கூறும் நல்லுலகர் என்று உறுதி படுத்திக் கொள்ளலாம்.

நோக்கம் அதுவல்லவேனினும், you are not way off the mark.

விரல்களைப் பயன்படுத்தி செய்யும் கலைகள் அல்லது கை-வேலைகள் எல்லாவற்றையுமே விரல் வித்தை எனலாம் எனினும் ஆழ்ந்து நோக்கின் ஓவியம், சிற்பம், நாட்டியம் போன்ற நுண்கலைகள் மற்றும் அக்க்யு ப்ரெஷர், வர்மக் கலை போன்றவை விரல் வித்தை எனக் கொள்ள கூடுதல் தகுதி பெறுகிறது. இருப்பினும், முத்ரா எனப்படும் முத்திரைகள் (அதாவது விரல்களால் செய்யப்படும் விதம் விதமான போஸ்கள்) சிறப்பு தகுதி பெற்று விரல் வித்தை என்னும் சொற்றொடர்க்கு தகுதி பெறுகிறது என்று கூறலாம்.

இவ்விதமான முத்திரைகளை நாம் அறிந்தும் அறியாமலும் (சினிமா அல்ல) தெரிந்தும் தெரியாமலும் நம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுத்தபடுகிறது என்பதை முத்ரா விதானம் என்னும் முத்திரைகளைப் பற்றி விளக்கும் புத்தகத்தைப் படிக்கும் பொழுது ஆச்சரியம் எழுவது தவிர்க்க முடியவில்லை.

நாட்டிய முத்திரைகள் பற்றி அவ்வளவாக கூறப்படாத இப்புத்தகத்தில் இடம் பெரும் முத்திரைகள் பெரும்பாலும் யோக மற்றும் ஆன்மீக சம்பந்தமானவையே. முத்ரா விதானத்தில் இடம் பெரும் முத்திரைகள் ஜபம் மற்றும் பூஜை, ஹோமங்களில் பயன்படுத்தப் படும் ந்யாச முத்ரா, அர்க்யஸ்தாபந முத்ரா, ஆவாஹநாதி முத்ரா, ஹோம முத்ரா, நிவேதன முத்ரா என வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.

சக்தி விகடன், குமுதம் பக்தி முதலான இன்ன பிற ஆன்மீக வார மாத சஞ்சிகைகளை படிப்பவர்கள் கண்டிப்பாக அபய மற்றும் வரத முத்திரைகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். இருகை கூப்பி பெரியவர்களையோ கடவுளையோ வணங்கும் போது நாம் பயன்படுத்துவது வந்தனீ முத்திரை.

நாம் குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்ட சுவரில் நிழலுருவில் விரல்களைக் கொண்டு அசைத்து மான் அல்லது நாய் மாதிரி காண்பித்து செய்யப்படுவது ம்ருகீ முத்திரை. பறவை பறப்பது அல்லது மீன் நீந்துவது மாதிரி செய்து காண்பிப்பது மத்ஸ்ய முத்திரை.

உலக அழகிப் போட்டியில் வலது கையை இடது பக்க மார்பில் வைத்துக் கொண்டு சதா பிளாஸ்டிக் புன்னகைக்கும் ஒல்லிப் பிச்சான் அழகிகள் செய்வது ஹ்ருதய முத்திரை.

சினிமாவில் கதாநாயகியை வில்லன் தகாத எண்ணத்தோடு நெருங்குகையில் மார்பின் குறுக்கே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வீரிடும்போது செய்யப்படுவது கவச முத்திரை.

இவ்வாறாக நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் முத்திரைகள் 'ஹேன்ட் ஜெஸ்சர்ஸ்' அல்லது பொதுவாக 'பாடி லாங்குவேஜ்' என்று தற்காலத்தில் வழங்கப்படுகிறது. எந்தெந்த மாதிரியான சூழ்நிலைகளில் எந்தெந்த ஜெஸ்சர்ஸ் பயன்படுத்தப் பட வேண்டும் அல்லது பயன் படும் என்று விளக்கும் 'பாடி லாங்குவேஜ்' பற்றிய நவீன புத்தகங்களும், கட்டுரைகளும் என்று ஏராளமாக காணக் கிடைக்கிறது. இம்மாதிரியான நூல்களுக்கெல்லாம் முன்னோடி என்று முத்ரா விதானத்தைக் கொண்டால் தப்பில்லை என்றே படுகிறது.

உதாரணமாக, கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கும் 'தம்ஸ் அப்' ஸைன் ஒரு பாஸிடிவ்வான ஜெஸ்சராக கருதபபடிகிறது. இந்த 'தம்ஸ் அப்' ஸைநை இருகைகளையும் கொண்டு தசாவதாரத்தில் பாட்டி வேடமிட்ட கமல் தோல் பொம்மைகள் தீயில் பொசுங்கி போன சூழலில் அசினை நோக்கி செய்தது போல செய்தால் அது த்ரைலோக்ய ஸம்மோஹினீ எனப்படும் முத்திரை என்கிறது முத்ரா விதானம். கொஞ்சம் ஆழ்ந்து நோக்கின் இந்த த்ரைலோக்ய ஸம்மோஹினீ என்ற பெயரிற்க்கும் 'தம்ஸ் அப்' ஜெஸ்சரிந் பாஸிடிவ்வான கன்னடேஷனுக்கும் ஏதோவொரு தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.

மற்றபடி இந்த முத்ரா விதானம் என்பது முத்ரா விக்யான் (science of mudras) என்றும் ஐந்து விரல்களும் பஞ்ச பூத தத்துவங்கள் என்று தொடங்கி விரல்களின் நுனியில் வெளிப்படும் சக்தி மின்னூட்டம் எவ்வாறு முத்திரைகளால் சீரமைக்கப்பெற்று உடல் பலப்படுகிறது அல்லது உடல் உபாதைகள் குணமாகிறது என்பது வரை ஏராளமான விளக்கங்கள், விஷயங்கள் வலையில் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கும் போது இதுவும் ஜோசியம் போன்று ஒரு ஸ்யூடோ சயன்ஸ் எனக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, சூன்ய முத்திரையை பயன் படுத்தி செல்பேசி செவிடான காதுகளின் கேட்கும் திறனை திரும்பப் பெறலாம் என்பது தற்காலத்திற்கு ஏற்ற செலவில்லாத, மருந்தில்லாத தீர்வாக கவர்ச்சி காட்டுகிறது.

நிற்க.

இம்மாதிரியான முத்திரைகளினால் பயன்பெற வேண்டும் என நினைப்பவர்கள் இது பற்றி நன்கு அறிந்த மற்றும் தகுந்த பயிற்சி உடையவர்களின் துணை கொண்டு இதில் ஈடுபடுவது சாலச் சிறந்தது. ஏனெனில், 'ம்ருகீ' முத்திரையை தவறாக பயன்படுத்தியதால்தான் "பாபா" படம் ரஜினிக்கு தோல்விப் படமாயிற்று என விஷயம் அறிந்தவர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ள இயலவில்லை.

ஆவல் மேலிட, பாடல் ஒளிபரப்புவதற்கு முன்னால் தொ. கா. தொகுப்பாளினிகள் செய்யும் விதம் விதமான விரல் வித்தைகள் முத்ரா விதானத்தில் அடங்குமா என இது பற்றி நன்கு அறிந்த என் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் கேட்டதில், அதெல்லாம் "சேஷ்டா" விதானத்தில் தான் அடங்கும் என்கிறார்.