Friday, April 9, 2010

From my Archives - I

போன வாரம் எதையோ தேடப்போய் லாப்டை குடைந்துக்கொண்டிருந்ததில் சுமார் 8 -10 வருடங்களுக்கு முன்பாக நான் எழுதி வைத்திருந்த நோட்பேட் ஒன்று சிக்கியது.  தேடுவதை மறந்து அதை புரட்டிப்பார்த்ததில் அக்காலத்தில் நான் எழுதிவைத்தவை அதிலிருந்தது.  அந்த ஆர்கைவ்சிலிருந்து ஒன்று உங்கள் பார்வைக்கு.. எடிட் செய்யப்படாமலேயே..

பின்புலம்:
அப்போது வலைப்பதிவு இருக்கவில்லையோ அல்லது நான் பரிச்சயமில்லாமல் இருந்தேனோ தெரியவில்லை. ஒரு தனிச்சுற்று சிற்றிதழ்  pdf பார்மெட்டில் சுமார் நான்கைந்து பக்கங்களுக்கு தயார் செய்து ஈமெயில் மூலம் விநியோகம் செய்யலாம் என்று உத்தேசித்திருந்தேன்.  அது வெறும் உத்தேசமாகவே முடிந்து  விட்டது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.  அதற்காக நான் எழுதிய முன்னுரை இது.

"இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்று நேரடியாக ஆரம்பிக்க ஆசை தான். ஆனால் நீங்கள் எல்லோரும் ஒத்துக்கொள்ள வேணுமே...

எதற்கு இவ்வளவு பீடிகை?

என்ன ஆசை?

நீங்கள் எல்லோரும் தினமும் செய்தித்தாள் படிக்கிறீர்களா? வார மற்றும் மாத சஞ்சிகைகளை படிக்கிறீர்களா?

ஒன்று கவனித்திருப்பீர்களே!!

"இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது"

இப்போது பேனா பிடித்தவனையும் இந்த வரிசையில் இணைத்துக்கொள்ளலாம்.

சரி. யாரெல்லாம் பேனா பிடிக்கிறார்கள்?

மிஸ். அமிஞ்சிக்கரை, சின்னத்திரையில் 'டமில் பேஸும்' குட்டை பாவாடைப் பெண், சமீபத்தில் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர், தனக்குத்தானே பல்வேறு பட்டம் சூட்டிக் கொண்டவர், 'சோஷியலைட்டுகள்' (இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாராவது புரிய வைத்தால் அவர் சென்னைவாசியாக இருக்கும் பட்சத்தில் தினமும் ஒரு வேளை குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.), தொழிலதிபர்களின் மனைவிகள், ஓய்வுப் பெற்று வீட்டில் சும்மா இருக்கும் அரசு அதிகாரிகள், பரபரப்பான வழக்கில் தண்டனைக்குள்ளான குற்றவாளிகள்...

இப்படி பட்டியல் தண்ணீர்குட வரிசையாய் நீண்டுகொண்டே போகிறது...

இவர்களுக்கெல்லாம் என்ன தகுதி?

பிராபல்யம்?
அனுபவம்?
மொழி அறிவு?
புலமை?
தொழில் வித்தகம்?

இம்மாதிரி ஏதாவது காரணங்கள் இருப்பினும், எதோ குறைவு இருப்பதாகவே படுகிறது.

இப்போது ஊகித்திருப்பீர்களே!!

ஆமாம்.  மாதம் இருமுறையோ, மாதா மாதமோ என் எண்ணங்களை (ஒரு சின்ன வட்டத்திற்கு) பகிர்ந்து கொள்ளலாம் என்று உத்தேசித்துள்ளேன்.  தினசரிகளில் வரும் சின்டிகேடட் பீச்சர்ஸ் மாதிரி, "கற்றதும் பெற்றதும்" மாதிரி...

என்ன, ரெடியா?

ரெடியில்லாதவர்கள் 'இது தேவையில்லை' என்று விண்ணப்பித்தால் அடுத்த முறை அனுப்பப்பட மாட்டாது.  அம்மாதிரி விண்ணப்பிக்கிறவர்களை ஒசாமா பின் லேடன் கடத்தட்டும்.

3 comments:

vshe.blogspot.com said...

pottu thaaku

Muthukumar's said...

Dear rudra,
chinna vaisil peramur il ezuthiya kathikaliyum thedi pidithu prasurithal mikka magilchi kollven.

Vijay Anand said...

Rudra, I really like the lively adjectives you use da. Nice to know that you had the same 'pena pulamai' 10 years before too.

Energetic and very promising.

Keep blogging.

Cheers,
Vijay